பொதுவாகவே எனக்கு எப்போதும் மனோதத்துவம், ஆளுமைத்திறன், சுயமுன்னேற்றம் போன்றவை தொடர்பான புத்தகங்கள் என்றாலே ஆகாது. தன்னளவில் முழுமை பெறாத மனிதன் பிறருக்கு வழிகாட்டுவது என்பது கூடாத ஒன்று என்ற கருத்தில் வேரூன்றி இருந்தவன். காரணம் நான் படிக்க நேர்ந்த ஓரிரு புத்தகங்கள்.
மிகவும் பரந்த அளவு வாசிக்கும் பழக்கம் உடைய நான் தற்போது ஏறக்குறைய ஓராண்டுகாலமாக ஓஷாே, ஜகி மற்றும் சேட்டன் பகத்துடன் சில அரசியல் தொடர்பான புத்தகங்களுடன் சுருக்கிக்கொண்டேன்.
முகநூலில் உலவிக்கொண்டிருந்தபோது கீர்த்தனாவின் Key to awareness புத்தகம் பற்றி அறிய நேர்ந்தது. எனக்கு கீர்த்தனா எட்டாம் வகுப்பில் பள்ளி தோழர். கீர்த்தனா ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு, அதுவும் Guide to overcome life problems எழுதும் அளவுக்கு வாழ்வில் முன்னெடுத்து சென்றுள்ளாரா என்ற வியப்பிடனேயே புத்தகத்திற்கு வேண்டுதல் அனுப்பி காத்திருந்தேன். நம் வகுப்பு தோழர் ஒரு புத்தகத்தின் ஆசிரியரா என்ற மகிழ்ச்சியும் அவர் என்ன எழுதி கிழித்திருப்பார் என்ற ஆர்வம் மட்டுமே இருந்ததேயல்லாமல் புத்தகம் குறித்த ஆர்வம் துளியுமில்லை.
ஆனால் இன்றுதான் புத்தகம் கிடைத்தது. பக்கங்கள் புரள புரள என் முன்முடிவுகள் அனைத்தும் தகர்ந்துபோய்விட்டது. மிகைபடுத்தாமல் கூறினால் இது ஒரு அற்புதமான படைப்பு. இதற்கு பின் இருக்கும் கண்டிப்பாக கடுமையான உழைப்பு.
பொதுவாக இதுபோன்ற புத்தகங்கள் வெறும் போதனையாகவே இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் இதன் ஆசிரியர் மாற்றத்திற்கு தேவையான கருவிகளையும் வழங்கியிருக்கிறார். பாராட்டுக்கள். இந்நூல் இவரது முதல் படைப்பு என்பதை நம்ப முடியவில்லை. மிக நேர்த்தி. என்றும் நான் தவற விடாத மாலை நேர யோக பயிற்சி இந்த புத்தகத்தை மூடி கீழேவைக்க முடியாத காரணத்தால் தவறி விட்டது. கண்டிப்பாக இந்த வழிகாட்டி அனைவரது கையிலும் இருக்க வேண்டும். உங்களிடம் மேலும் பல படைப்புகளை எதிர்நோக்குகிறோம். வாழ்த்துக்கள்.